மௌனமான நேரம்

 

Saturday 6 August 2011

குழந்தைகள் அடிவாங்குவது ஏன்?

Posted by மௌனமான நேரம் | Saturday 6 August 2011 | Category: | 0 பின்னூட்டங்கள்
குழந்தைகள் பெரும்பாலும் அடிவாங்குவது அவர்களின் பெற்றோரிடம் இருந்து தான். எதற்காக குழந்தைகள் அடிவாங்குகிறார்கள் என்று பார்த்தால் பெரும்பாலும், அவர்கள் பண்ணுகிற சேட்டைக்காகவோ, குற்றத்துக்காகவோ இல்லவே இல்லை. கணவன், மனைவி இருவர்களிடேயே நடக்கும் சண்டை, மனவருத்தம், ஏரிச்சல் மற்றும் சிறு சிறு பிரச்சனைகளே!
சில நேரத்தில், அவர்கள் கொடுக்கும் அடி, அந்த நேரத்தில் ஒன்னும் பண்ணாமல் போகலாம், ஆனால் அந்த அடியால் அவர்கள் முதுமையில் கஷ்ட படுவார்கள் என்பதே உண்மை.

சில நேரத்தில், கொடுக்கும் அடியை விட, வார்த்தையால் பெற்றோர்கள், குழந்தைகளை கொல்லாமல் கொல்லுகிறார்கள். இதுவெல்லாம் மன்னிக்க முடியாத குற்றம் என எனக்கு தோன்றுகிறது.

‘அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்’ என்கின்ற பழமொழிகள் குழந்தைகளை கண்டித்து வளர்ப்பதின் அவசியத்தை வலியுறுத்துகின்றன. ஆனால், அடி குடுத்து வளர்ப்பதின் அவசியத்தை வலியுறுத்தவில்லை.

பெற்றோர்கள் சொல்வதை மிகச் சரியாக புரிந்து கொள்ளும் திறன் குழந்தைகளுக்கு உண்டு. அதே சமயத்தில் குழந்தையின் நல்ல நடத்தைகளை பரிசு, பாராட்டு, அன்பு, அரவனைப்பு, ஆகிய வலிமையூட்டிகளை பயன்படுத்தி ஊக்குவிக்க வேண்டும். தொடர்ந்து அவ்வாறு ஊக்குவித்துக்கொண்டே வந்தால், நல்ல நடத்தைகள் அதிகமாகி கெட்ட நடத்தைகளுக்கு நேரமில்லாது அவை தானாகவே குறைந்து விடும்.

அதே நேரத்தில், பிறர் மேலுள்ள கோபத்தை பெற்றோர்கள் குழந்தையிடம் காட்டுவதை தவிர்க்கவேண்டும்.

(குறிப்பு: குழந்தைகளை அடிப்பது சட்டப்படி குற்றம்)

Tuesday 2 August 2011

மரணம் தந்த வலி

Posted by மௌனமான நேரம் | Tuesday 2 August 2011 | Category: | 0 பின்னூட்டங்கள்
ண் புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்படும் அளவுக்கு அறிவியல் வளர்ந்த போதும், ‘மரணம்’ என்னும் இயற்கை நியதியை மனிதனால் இன்று வரை வெல்ல முடியவில்லை. ‘மரணம்’ என்னும் வலி, நண்பரால், உறவுகளால் ஏற்படும்போது நம்மால் தாங்க முடிவதில்லை, ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அந்த நேரத்தில், தாங்க முடியாத துக்கத்தால் சிலர் தங்களையும் மாய்த்துக் கொண்டு விடுகிறார்கள்.


தந்தையின் மரணம்  எனக்கு ஏற்பட்ட மரண வலி. இரண்டு வார காலம் கடந்த நிலையிலும், என்னால் மறக்க முடிய வில்லை, ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதோ ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டு போனதை போல, எதோ இழந்ததை போல, தினந்தினம் வலிக்கிறது.

அந்ததொரு கொடிய நோயை, எந்த ஒரு மருத்துவராலும் தீர்க்க முடியாததாய் போனது.   மாற்று முயற்சிக்கு அவரது வயது ஒரு தடையாய் போனது.  இதற்கு என் தந்தையே ஒரு காரணம் என கூட சொல்லலாம். என்னை என்ன செய்திடும் என்ற அசட்டு நம்பிக்கை. இதை சில காலம் முன்பாக சொல்லி இருந்தால்... இது நடந்து இருக்காது என்பது என் நம்பிக்கை, இது உண்மையும் கூட. (நாங்களும் சரியான நேரத்தில் கவனிக்க தவறி விட்டோமோ, தெரியவில்லை)

அவர் நல்லதொரு கணவனாய் , தந்தையாய், மாணவர்களுக்கு ஆசிரியராய், ஆசிரியர்களுக்கு எல்லாம் ஆசிரியராய், நண்பர்களுக்கு உற்ற நண்பராய் எங்களுக்கு என அவர் ஆற்றிய பணிகள் ஏராளம்.  

"விருந்தோம்பல்" என்ற வார்த்தைக்கு, அவரிடம் நான் கற்றவை மறக்க இயலாது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாத, எல்லோரையும் சமமாக உபசரிக்கும் அவருக்கு, அவரே நிகர். சராசரி மனிதர்களை விட, பல படி மேலாக தான் வாழ்ந்தார்.

அவர் விட்டு சென்ற நினைவுகளை எப்போதும் மறக்க இயலாது.  அவரது பணிகளை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..

இதை படிக்கும் நண்பர்களுக்கு, நான் சொல்லுவது எல்லாம், எந்த ஒரு உடல் தொல்லைகளையும் வயது இருக்கும் போதே மருத்துவம் செய்திட வேண்டும்.  சில உடல் தொல்லைகளை, வயது தாண்டிய பிறகு மருத்துவம் செய்திட இயலாது. இந்த யோசனை உங்களுக்கு மட்டுமல்ல,  உங்களை சார்ந்து இருக்கும் பெற்றோருக்கும் கூட. என்னை என்ன செய்திடும் என்ற அதே அசட்டு நம்பிக்கை அவர்களிடமும்  இருக்க கூடும். ஆனால், நாம் தான், எடுத்து சொல்லி மருத்துவம் செய்திட வேண்டும்.

அதுமட்டுமல்ல, நாம் வைத்திருக்கும் இரண்டு சக்கர வண்டிக்கு அடிக்கடி சர்வீஸ் செய்யும் நாம், நமக்கு, நம் உடம்புக்கு ஏன் செய்வதில்லை?

என் தந்தை ஆன்மா சாந்தி அடைய  தினம் இறைவனிடம் வேண்டும் நான்.

மரணம் தந்த வலி, மரண வலி.