Wednesday 29 July 2009
விவாதம் விவகாரம் ஆவது எப்போது?
Posted by மௌனமான நேரம் | Wednesday 29 July 2009 | Category:
சிந்தனைகள்
|
உலகில் எல்லாமே தெரிந்தவரும் ஒருவரும் இல்லை. எல்லாமே சரியாக சொல்பவரும் ,செய்பவரும் ஒருவரும் இல்லை. எல்லா மனிதனுக்கும் தெரியாதது, புரியாதது கண்டிப்பாக ஏதாவது இருக்கும். இதனை எப்போது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ அப்போதுதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.
ஆரோக்கியமான விவாதம் அறிவை வளர்க்கும், விவாதிப்பவர்களிடையே புரிதலை அதிகப்படுத்தும். ஆனால் இப்படியொரு ஆரோக்கியமான விவாதத்தை நடத்த நம் ஒவ்வொருவரின் குணமும் தடையாக இருக்கிறது. ஒரு விஷயத்தை பற்றி விவாதம் ஆரம்பித்து, போக போக அது விவாதிப்பவரை குறித்து மாறி விடுகிறது. ஏனென்றால் நம்மால் விவாதத்தையும் விவாதிப்பவரையும் பிரித்து பார்க்க முடிவதில்லை.
உதாரணமாக, ஒரு நண்பன் நம்மிடம் வந்து ,' நீ இப்படி செய்தது தவறு' என்றால் நாம் என்ன செய்வோம்? நான் இப்படி செய்ததற்கு காரணம் இது என்று அவனுக்கு புரிய வைக்க முயன்றால், அவன் அவனது பதில் வாதத்தை முன் வைப்பான். ஒரு வேளை அவன் சொன்னது சரியாக கூட இருக்கலாம். நாம் செய்தது தவறாக கூட இருக்கலாம். இல்லை அவன் சொன்னது தவறாக இருக்கலாம். விவாதம் முற்ற முற்ற இருவரில் யார் பக்கம் ஞாயம் இருக்கிறது என்று தெரியவரும். அப்படி இல்லாமல், நாம் ' நான் செஞ்சது மட்டும் தப்புன்னு சொல்ல வந்துட்டே, நீ அப்படி செய்யலியா?' என்றோ 'என் இஷ்டம் நான் என்ன வேணும்னாலும் செய்வேன்' என்றோ சொனால், அந்த வாதம் விவகாரமாக முடியும்.
இது கணவன் மனைவி, பெற்றோர், பிள்ளைகள், உற்றார், உறவினர், அக்கம் பக்கத்து வீட்டுகாரர்கள், உடன் பணிபுரிவோர் எல்லாருக்கும் பொருந்தும்.
நம்மால் ஒருவர் நாம் செய்வது தவறு என்று சொல்வதை ஏற்று கொள்ளவே முடிவதில்லை. 'நான் செய்வது', 'நான்' இந்த இரண்டையும் வேறுபடுத்தி பார்க்க முடிவதில்லை. நாம் செய்த தவறை ஒருவர் சுட்டிக்காட்டும்போது அது நம்மையே சுட்டி காட்டுவதாக எடுத்துகொள்கிறோம்.
பணி புரியும் இடத்தில் இந்த பிரச்சனை வேறு விதமாக வரும். நம் பாஸ் நம்மிடம் 'நீ செய்த இந்த வேலையில், இது ஒரு பிழை' என்றோ, ' நீ இந்த வேலையை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்' என்றோ சொல்லும்போது கூட அவர் நம்மை தவறு சொல்கிறார் என்று தான் முதலில் நமக்கு தோன்றுகிறது.
அதை விடுத்து, அவருக்கு நாம் செய்தது சரி என்று புரிய வைத்தால், அவருக்கு நாம் செய்தது சரியாக இருக்கும் பட்சத்தில் நம் மீது நம்பிக்கை கூடும். (இது வேண்டுமென்று இல்லாத தவறை கண்டுபிடித்து பெரிது பண்ணும் பாஸ் க்கு பொருந்தாது :)
நான் ஒரு அலுவகத்தில் interview க்கு சென்றிருந்தேன். அதில் Group Discussion என்று ஒரு stage இருந்தது. அதில் ஒரு தலைப்பு கொடுப்பார்கள். அந்த தலைப்பை குறித்து எல்லோரும் விவாதிக்க வேண்டும். அதன் விதிகளில் ஒன்று, எக்காரணம் கொண்டும் சண்டை போட கூடாது.
நாங்கள் எட்டு பேர் இருந்தோம். தலைப்பு 'இந்தியாவில் பெண்களும் கல்வியும்'. எங்கள் குழுவில் சிவா , பிரியா என்று இருவர் இருந்தார்கள். விவாத்தை ப்ரியா ஆரம்பிக்க சொல்லி HR (Human Resource Manager) சொன்னார். பிரியா தனது கருத்தை சொல்லி முடிப்பதற்குள், அவரது கருத்து தவறென்று சிவா வுக்கு தோன்றியது, அதையே சொன்னார். ப்ரியா அதை மறுத்து பேசினார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. HR வந்து சண்டையை நிறுத்து, சிவாவை முதலில் ஆரம்பிக்க சொன்னார். இந்த தடவை, ப்ரியாவுக்கு சிவா சொன்னதில் உடன்பாடு இல்லை என்பதால் மீண்டும் சண்டை. இது ஒரு நாலைந்து தடவை நடந்தது. HR க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
இங்கு பிரச்சனை என்னவென்றால், அவர்கள் இருவரும் தமது கருத்துக்களுக்காக விவாதிப்பதை விடுத்து, நீ ஆண் ஆனதால் உன் கருத்து இது, நீ பெண் ஆனதால் உன் கருத்து இது என்று அந்த விவாதத்தை ஒரு ' தனி நபர் தாக்குதல் ' ( Personal attack ) ஆக மாற்றிவிட்டார்கள்.
இது நம் குடும்பத்தில், அலுவலகத்தில், கட்சியில், அரசியலில் என்று எல்லா இடத்திலும் நடக்கிறது.
எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. அதனால் தான் நினைப்பதை சொல்லலாம் . ஆனால், கேட்பவர் அதை சரியாக புரிந்து கொள்ளாமல் இருந்தால் என்ன செய்வது, நாம் எல்லோரும பேசும் இடத்திலும், கேட்கும் இடத்திலும் மாறி மாறி இருக்கிறோம்.
பேசுவதை அடுத்தவர் புரிந்து கொள்வது போல் பேசுவதும், கேட்பவருக்கு ஒப்பில்லாத கருத்தை புரியவைப்பதும் , கேட்பவரது கருத்தையும் உள்வாங்கி, சரி எனின் ஏற்றுகொள்வதும் பேசுபவர் கடமை.
பேசுபவர் சொல்வதை புரிந்து கொள்ள முயற்சி செய்வதும், புரியாததை தெளிவு படுத்தி கொள்வதும், தவறை சுட்டி காட்டுவதும் , தன் கருத்து தவறாயிருந்தால் ஏற்று கொள்வதும கேட்பவர் கடமை.
இந்த இருவரும் தன் கடமையை புரிது கொண்டால், பேச்சு சுதந்திரம் பல ஆக்க பூர்வமான விஷயங்களுக்கு உபயோகப்படும். உலகில் பாதி பிரச்சனை தீர்ந்து விடும்.
அதற்காக, யார் என்ன சொன்னாலும் கேட்டு கொள்ள வேண்டும் என்று இல்லை. அதை ஆராய்ந்து சரியானதை எடுத்து ,தவறானதை விடுக்க வேண்டும்.
அந்த மன முதிர்ச்சி வேண்டும்.
தொடர்புள்ள இடுகைகள்: சிந்தனைகள்
2 பின்னூட்டங்கள்:
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *
குறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
நல்லதொரு சிந்தனை. அதற்கெல்லாம் மனம் பக்குவம் அடைய வேண்டும் எனத் தெளிவாகச் சொல்லியதோடு, பக்கவமில்லாத பலர் இருக்கிறார்கள் என மறைவாகச் சொன்னதாக எடுத்துக்கொண்டு உங்களிடம் நான் விவாதத்தில் இறங்கினால் அது தீராதப் பிரச்சினையாகிவிடும்.
என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை எடுத்துக்கொள்பவரின் மனநிலையும், என்ன சொல்கிறோம் என்பதை நினைவில் கொள்பவரின் மனநிலையும் பொருத்தே ஒரு விசயம் விவாதமாகிறதா, விவாதமாகி விவகாரமாகிறதா எனத் தெரியும்.
ஒருவர் பிடிக்கவில்லையெனில் அதற்கு காரணம் ஆராய்ந்து கொண்டிருக்கமுடியாது. பிடிக்கலைன்னா, பிடிக்கலை. அவ்வளவுதான். அதுபோலவே ஒருவர் பிடித்திருக்கிறார் என்பதற்கும். இதற்கும் கருத்துக்கும் தொடர்பு உண்டு. சொல்பவர் என பார்க்கும் உலகமிது. மிக்க நன்றி.
வருகைக்கு நன்றி வெ.இராதாகிருஷ்ணன் சார்.
நீங்க சொல்றது சரிதான். ஒருத்தரை பிடிக்கரதுக்கும் பிடிக்காததுக்கும் காரணம் கண்டுபிடிச்சிட்டு இருக்க முடியாது. ஆனா நமக்கு பிடிகாதவங்களும் நல்லது (சரியான விஷயம்) சொல்லலாம். நமக்கு பிடிகாதவங்கங்கர எண்ணம் நம் கண்ணை மறைக்காம இருந்தாதான் அது புரியும். இல்லீங்கள?